Thursday, July 17, 2008

எழுதித் தீருமோ எம் குரு பெருமையும்


கல்லூரியில் மகனையோ மகளையோ சேர்க்கும் முன் பல மத்திய தர குடும்பங்களில் பல மாதங்களுக்கு பெரிய வாத பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருக்கும். பல்விதமான துறைகள், ஒவ்வொரு துறையிலும் பல உட்பிரிவுகள். பல தரப்பட்ட கல்லூரிகள். இப்பெரிய உலகில் அக்குழந்தைகள் அடியெடுத்து வைப்பதற்கு தைரியம் கொடுக்கும் வகையில் பேசுவோரே இல்லை. பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி மனதைக் குழப்பியும் பயமுறுத்தியும் விடுவர்.

கடைசியில் ஒரு பெரியவர் ஒரு முத்தாய்ப்பு வைக்கிறார். “இதோ பாரு! நீ எந்த ஃபீல்டல போனாலும் பெரிய ஆளா வரலாம். உனக்கு வேண்டியது கஷ்டப்பட்டு படிக்கிற குணமும், கடவுள் மேல நம்பிக்கையுந்தான். அம்மா அப்பாவுக்கு பணக்கஷ்டம் மனக் கஷ்டம் இல்லாத மாதிரி எந்த சப்ஜெக்ட்டை எந்த காலேஜ்-ல வேணுமானாலும் எடுத்து படி. அவன் வழி காட்டுவான்

ஆன்மீகத்திற்கு வேண்டியதும் இந்த மனப்பக்குவமே, "அவன் வழி காட்டுவான்"

எல்லாத் துறைகளைப் போலவே ஆன்மீகத்திலும் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உண்டு. அவரவரும் கடந்து வந்த பாதையை வைத்து தத்தம் அனுபவங்களைக் கொண்டு கடவுளைப் பற்றி விவரிக்கின்றனர். எல்லோர் சொல்வதும் ஏதோ ஒரு விதத்தில் சரியே. ஆனால் அது எல்லாமே குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்து வர்ணித்தது போலவே ஆகும். இந்த நடைமுறை நிலையை கபீரும் ஏற்றுக் கொள்கிறார்.

गुरु गुरु में भेद है, गुरु गुरु में भाव ।
सोइ गुरु नित बन्दिये, शब्द बतावे दाव ॥


குரு குரு மே பேத ஹை, குரு குரு மே பாவ் |
ஸோயி,குரு நித் பந்தியே, ஷப்த் பதாவே தாவ் ||


குரு குருவிலும் பேதம் உண்டு, குரு குருவிலும் பாவனை வேறு
குரு அவனடி தினம் பணிந்திடு, நாதத்தில் கூட்டிடும் நாதன் பேறு

(நாதன் பேறு = இறைவன் என்ற செல்வம் )


[ இரண்டாவது அடியை உரைநடையில் “நாதத்தில் நாதன் பேறு கூட்டிடும் குரு, அவனடி தினம் பணிந்திடு” எனக் கொள்க.]

'ஷப்த் பதாவே தாவ்' என்று கபீர் சொல்வது ஔவையின் “சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி, சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி'' என்ற வரிகளை நினைவூட்டுகிறது.

சப்தம் அல்லது நாதம் சிருஷ்டியில் முதலில் தோன்றியதாக சொல்லப்படுகிறது. ஆன்மீகத்தின் கடைசி கட்டத்தில் சாதகன் உணரும் நிலையும் அதுவே எனப்படுகிறது. சிவமே எல்லாவற்றிலும் நாதமாய் விளங்குகிறது என்கிறது திருமந்திரம்.

சத்தமும் சத்தமனமும் மனக்கருத்து
ஒத்தறிகின்ற இடமும் அறிகிலர்
மெய்த்தறிகின்ற இடம் அறிவார்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே (1973)

நாதமும் அதனை உணர்கின்ற மனமும் மனக்கருத்து ஒருமித்துச் சிவம் உள்ள இடத்தையும், யாரும், அறியார். அதை உள்ளபடி உணர்ந்தாரானால் சிவ பெருமான் இருக்குமிடம் அதுவே என்பதை அறிவர்.

அதை உணர்ந்தே பட்டினத்தாரின் சீடராகிய பத்திரகிரியாரும்

வேதாந்த வேதமெல்லாம் விட்டு ஏறியே கடந்து
நாதாந்த மூலம் நடு இருப்பது எக்காலம் ? -

என்று ஏங்குகிறார்.

தமக்கென்று வாய்த்த குருவின் உரையில் நம்பிக்கை வைத்து அவர் சொல்லியபடி பயிற்சிகளை செய்து கொண்டு போனால் தானே வழி பிறக்கும். குரு உபதேசித்த மந்திரம் கையில் கொடுக்கப்பட்ட விளக்கு போல. அதன் துணையுடன் பாதையை பிடித்துக் கொண்டு போனால் முன்னேறிச் செல்ல முடியும். அதைவிட்டு சுற்றிலும் இருக்கும் இருளைக் கண்டு பயந்து இருந்த இடத்திலே அழுது கொண்டிருப்பவனுக்கு முன்னேற்றம் ஏது? கபீர் அதனால் தான் நாமசெபத்தின் பயனை மேலும் வலியுறுத்துகிறார்.

नाम भजोमन बसि करो, यही बात है तंत ।
काहे को पढि पचि मरो, कोटिन ज्ञान गिरंथ ॥


நாம் பஜோமன் பஸி கரோ, யஹி பாத் ஹை தந்த் |
காஹே கோ படீ பசீ மரோ, கோடின் ஞான் கிரந்த் ||


செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவைநூறு படிப்பதும் வீணே

மாற்று

மனமே செபித்து வசிகொள், இதுவே நாதன் அருளின் இரகசியம்
தினமே செப்பிடும் சாத்திரம் நூறு, இன்னும் அதுவோ அவசியம்

ஆராய்ச்சியால் அறியப்படுபவன் அல்ல கடவுள். ஆராய்ச்சி செய்து நூற்றுக் கணக்கான புத்தகங்கள் எழுதலாம், படிக்கப்படலாம். ஆனால் அவையெல்லாம், வள்ளலாரின் மொழியில் “சாத்திரக் குப்பை” தாம்.

சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம் ?

என்று பத்திரகிரியார் குறிப்பிடும் (மெய்ஞான புலம்பல்: 155 ) சூத்திரமே குருவழி வரும் மந்திர உபதேசம். அதை முறையாக செபித்தால் அது இறைவனிடம் இட்டுச் செல்லும். அதை உறுதி செய்வது போல் இருக்கிறது திருமந்திரத்தின் இன்னொரு பாடல்.

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது;
நாத முடிவிலே நஞ்சுஉண்ட கண்டனே

இருட்டு நேரத்தில் தன் படகை அடைய வேண்டிய படகுகாரன் படகைக் கட்டி வைத்திருக்கும் சங்கிலியை பிடித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் முன்னேறிச் சென்று படகை அடைவது போல, ஒவ்வொரு முறை நாமத்தை உச்சரிக்கும் போதும் சங்கிலியின் ஒரு இணைப்பின் அளவு இறைவனை நெருங்குகிறோம் என்பாரம் அன்னை சாரதா தேவி.

இன்று வியாச பூர்ணிமை. குரு மேன்மையை நினைவு கூற சிறப்பான தினம். கபீர் தமது குரு மீது வைத்துள்ள அன்பையும் பெருமையும் ஒருங்கே அவரது கீழ்கண்ட ஈரடியில் காணலாம்.

सब धरती कागद करूं , लिखनी सब बनराय ।
सात समुद्र का मसि करूं, गुरु गुण लिखा न जाय ॥

ஸப் தர்தீ காகத் கரூன், லிகனீ ஸப் பன்ராய் |
ஸாத் ஸமுத்ர் கா மஸி கரூன், குரு குண் லிகா ந ஜாய் ||


அடவி மரங்கள் கோலாகும், இத்தரை யெலாமாகும் பத்திரம்
கடலேழும் மசியாகும், எழுதித் தீருமோ எம்குரு பெருமையும்

(அடவி= காடு ; கோல்= எழுது கோல்; இத்தரை = நிலம்; பத்திரம்= காகிதம்.; மசி =எழுதும் மை)

ஞானியர் அருளில் ஞாலம் ஒளிரும்.

No comments yet

Posts